சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணைக்கு தடை விதிக்க கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், தமிழக பா.ஜ. பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் வி.ராகவாச்சாரி ஆஜராகி, நீட் தேர்வு நடைமுறையை புறந்தள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்திருப்பதாக தெரிவித்தார். அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், கொள்கை முடிவு எடுக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து ஒன்றிய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூலை 5க்கு தள்ளிவைத்தனர்.