திண்டிவனம்: அதிமுக முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரின்படி சசிகலா உள்பட 500 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், ரோசணை காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர்சி.வி.சண்முகம் கடந்த 9ம் தேதி அளித்த புகாரில், கடந்த 7ம் தேதி நான் அரசியல் ரீதியாக சசிகலா குறித்து சில கருத்துகளை ஊடகம் வாயிலாக பேட்டி அளித்தேன். அதற்கு சசிகலா நேரடியாக பதில் அளிக்காமல் தன் அடியாட்களை வைத்து கைபேசி மற்றும் வாட்ஸ்அப், டிவிட்டர், பேஸ்புக், வாயிலாக கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இன்றுவரை 500 பேருக்கு மேல் பதிவு செய்துள்ளனர்.
இந்த கொலை மிரட்டல் மற்றும் செயல்பாடுகளுக்கு காரணம் சசிகலா தூண்டுதல்தான். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து போலீசார் 506(1), 507 சட்டப் பிரிவில் யார் என்று தெரியாமல் மிரட்டுவது, 109 குற்றத்திற்கு உடந்தையாக இருந்து மற்றவர்களை வைத்து மிரட்டுவது, 67 தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.