×

கொரோனாவில் இருந்து மீண்டு வந்தாலும் கர்ப்பிணிகள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்: ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

புதுடெல்லி: ‘கொரோனாவில் இருந்து மீண்டு வந்தாலும், விரைவில் சிலருக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட்டு, அது கருவையும் பாதிக்கக் கூடும் என்பதால் கர்ப்பிணிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்’ என ஒன்றிய சுகாதார அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பாலூட்டும் தாய்மார்களைத் தொடர்ந்து கர்ப்பிணிகளும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஒன்றிய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதையடுத்து, கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* கொரோனாவால் பாதிக்கப்படும் 90 சதவீதத்திற்கும் அதிகமான கர்ப்பிணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் மீண்டு வந்தாலும், சிலருக்கு ஆரோக்கியத்தில் விரைவான பாதிப்பு ஏற்படக்கூடும், அது கருவையும் பாதிக்கக்கூடும். எனவே, கர்ப்பிணிகள் அனைவரும் தடுப்பூசி எடுக்க வேண்டும்.
* கர்ப்பம் தரித்தல் கொரோனா நோய்த் தொற்றின் அபாயத்தை அதிகரிக்காது.
* கடுமையான கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், மற்ற நோயாளிகளைப் போலவே, கர்ப்பிணிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.
* உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், 35க்கு மேற்பட்ட வயது போன்ற மருத்துவ நிலைகளைக் கொண்ட கர்ப்பிணிகள் கொரோவானால் கடுமையான பாதிப்புக்குள்ளாக அதிக ஆபத்துள்ளது.
* முன்களப் பணியாளர்கள், தடுப்பூசி போடுபவர்கள் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசியின் நன்மை மற்றும் முன்னெச்சரிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க வேண்டும். இது கர்ப்பிணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, தடுப்பூசி பெறுவது குறித்து சரியான முடிவை எடுக்க முடியும்.
* பிரசவ காலத்தில் கொரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கு 95 சதவீதம் குழந்தை பிறக்கும்போதே நல்ல நிலையிலேயே இருக்கும்.
* சில சந்தர்ப்பங்களில், முன்கூட்டிய பிரசவத்திற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும், குழந்தையின் எடை 2.5 கிலோவுக்கும் குறைவாக இருக்கலாம். மேலும் அரிதான சூழ்நிலைகளில், குழந்தை பிறப்பதற்கு முன்பே இறக்கக்கூடும்.
* கர்ப்ப காலத்தில் ஒரு பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், பிரசவத்திற்குப் பிறகு அவருக்கு தடுப்பூசி போட வேண்டும்.
* கொரோனா தடுப்பூசிகள் கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானவை, அது நோய் பரவலில் இருந்து கர்ப்பிணிகளையும், மற்றவர்களையும் பாதுகாக்கிறது.
* எந்தவொரு மருந்தையும் போலவே, தடுப்பூசியும் பொதுவான, லேசான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். தடுப்பூசி பெற்ற பிறகு, கர்ப்பிணிகளுக்கு லேசான காய்ச்சல், ஊசி போடும் இடத்தில் வலி அல்லது 1-3 நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் போகலாம்.
* மிகவும் அரிதாக (1-5 லட்சம் பேரில் ஒருவர்), கர்ப்பிணிகள் தடுப்பூசி பெற்ற 20 நாட்களுக்குள் சில அறிகுறிகளை அனுபவிக்கக்கூடும், இது உடனடியாக கவனிக்கப்பட வேண்டும்.
* தடுப்பூசி பெற்ற 20 நாட்களுக்குள் மூச்சுத்திணறல், வாந்தியுடன் அல்லது இல்லாமல் தொடர்ந்து வயிற்று வலி, கை கால்களில் வலி அல்லது மூட்டுகளில் வீக்கம், சிறிய முள் புள்ளி ரத்தக்கசிவு, கடுமையான தொடர்ச்சியான தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
* தொற்று பரவாமல் தங்களையும், சுற்றி உள்ளவர்களையும் பாதுகாக்க, கர்ப்பிணிகளும் அவரது குடும்ப உறுப்பினர்களும் இரட்டை மாஸ்க் அணிவது, அடிக்கடி கை கழுவுதல் உள்ளிட்ட சுகாதாரங்களை கடைபிடிப்பது மற்றும் சமூக இடைவெளியை பராமரிப்பது மற்றும் நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது போன்ற கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கூடுதலாக 300 கோடி அமெரிக்கா உதவி
கொேரானா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு அமெரிக்கா பல கோடி மதிப்பிலான  மருந்துகள், உபகரணங்களை வழங்கி உதவி வருகிறது. அந்த வகையில், மேலும் ரூ.300  கோடிக்கு கொரோனா உதவி வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதுவரை இந்தியாவுக்கு ரூ.1000 கோடி கொரோனா நிவாரண உதவியை அமெரிக்கா  வழங்கியிருப்பதாக அந்நாட்டின் சர்வதேச மேம்பாட்டு அமைப்பு தகவல்  தெரிவித்துள்ளது.

மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மக்களுக்கு ஏற்கனவே கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசியை இந்தியாவில் இறக்குமதி செய்து பயன்படுத்த சிப்லா நிறுவனம் விண்ணப்பம் செய்தது. அதை பரிசீலனை செய்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம், 18 வயதிற்கு மேலாக உள்ளவர்களுக்கு அவசர கால பயன்பாட்டுக்காக மாடர்னாவை பயன்படுத்த நேற்று அனுமதி வழங்கியது.

102 நாட்களுக்குப் பின் 40,000க்கு கீழ் பாதிப்பு
* நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி குறித்த தகவல்களை ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது.
* கடந்த 24 மணி நேரத்தில் 37,566 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 102 நாட்களுக்குப் பிறகு தினசரி பாதிப்பு 40 ஆயிரத்துக்கு கீழாக சரிந்துள்ளது.
* தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் தினசரி பலி ஆயிரத்துக்கும் குறைவாக பதிவானது. கடந்த 24 மணி நேரத்தில் 907 பேர் பலியாகினர். மொத்த பலி எண்ணிக்கை 3 லட்சத்து 97 ஆயிரத்து 637.
* மொத்த பாதிப்பு 3 கோடியே 3 லட்சத்து 16 ஆயிரத்து 897.
* சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்து 52 ஆயிரத்து 659 ஆக சரிந்துள்ளது.
* காலை 7 மணி நிலவரப்படி, இதுவரை 32.90 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.



Tags : Pregnant women must be vaccinated even if they recover from corona: United States guidelines issued
× RELATED வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில்...