ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் கமாண்டர் நதீம் அப்ராரும், பாகிஸ்தான் தீவிரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீரில் நெடுஞ்சாலை பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், மாநில போலீசார், சிஆர்பிஎப் வீரர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில், பாரிம்போரா சோதனை சாவடி அருகே வாகனத்தில் பயணித்தவர்களின் அடையாள அட்டையை போலீசார் கேட்டனர். அப்போது, காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தவன் பேக்கில் இருந்து வெடிகுண்டை எடுக்க முற்பட்டான். விரைந்து செயல்பட்ட வீரர்கள், அவனையும், ஓட்டுனரையும் மடக்கி பிடித்தனர்.
முகக் கவசத்தை நீக்கிய பின், அவன் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் லஷ்கர் கமாண்டர் நதீம் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவனிடம் நடத்திய விசாரணையில், அவனது ஏகே 47 துப்பாக்கி, வெடி பொருட்களை வீட்டில் வைத்திருப்பதாக கூறினான். இதையடுத்து, அவனை வீட்டிற்கு அழைத்து சென்ற போது, வீட்டினுள் பதுங்கி இருந்த பாகிஸ்தான் தீவிரவாதி பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக சுட்டான். வீரர்களும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இதில், லஷ்கர் கமாண்டர் நதீம் அப்ரார், பாகிஸ்தான் தீவிரவாதி இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். 3 வீரர்கள் காயமடைந்தனர்.