டெல்லி: அமெரிக்க நிறுவனத்தின் தயாரிப்பான மாடர்னா கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்ய ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக்சின்’ தடுப்பூசி மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் உருவாக்கிய ‘கோவிஷீல்ட்’ ஆகிய 2 தடுப்பூசிகளும் பயன்பாட்டில் உள்ளன. மேலும் ரஷ்யாவின் ‘ஸ்பூட்னிக்-வி’ தடுப்பூசி பயன்பாட்டிற்கும் ஒன்றிய அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த சூழலில் கொரோனா வைரஸ்க்கு எதிராக சர்வதேச அளவில் உருவாக்கப்பட்ட ஃபைசர் மற்றும் மாடர்னா போன்ற தடுப்பூசிகளை இந்தியாவில் இறக்குமதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் அமெரிக்காவில் இருந்து மாடர்னா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய சிப்லா நிறுவனம் இறக்குமதி செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தது.
அந்த விண்ணப்பத்தில், இந்த மருந்திற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால், ஆரம்ப கட்ட பரிசோதனை இல்லாமல், இந்தியாவில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மேலும் இந்த தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்னர், 100 பேருக்கு தடுப்பூசி போட்டு அது குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சிப்லா நிறுவனம் தெரிவித்து இருந்தது.
சிப்லா நிறுவனத்தின் விண்ணப்பத்தை பரிசீலித்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம், மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. ஆர்என்ஏ அடிப்படையிலான தடுப்பூசி மருந்தை ஸ்பைக்வாக்ஸ் என்ற பெயரில் மாடர்னா நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.