×

இந்திய பாதுகாப்புப் படையினர், காஷ்மீர் மக்கள் பலரை கொன்ற லஷ்கர் அமைப்பின் டாப் தீவிரவாதி என்கவுண்டரில் சுட்டுக் கொலை!!

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே விடிய விடிய நடைபெற்ற சண்டையில் லஷ்கர் அமைப்பின் முக்கிய தீவிரவாதி 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். டிரோன் விமானங்கள் மூலம் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல், முன்னாள் காவல் அதிகாரி, மனைவியுடன் சுட்டுக் கொலை, ஆகிய அடுத்தடுத்த அசம்பாவிதங்களால் ஜம்மு - காஷ்மீர் முழுவதும் கடந்த 3 நாட்களாக பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில் நேற்று ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு கிடைத்த தகவலை அடுத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது வீடு ஒன்றில் பதுங்கி இருந்த தீவிரவாதியை ராணுவத்தினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.விசாரணையில் அது லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாத கமாண்டர் நதீம் அப்ரார் எனபது தெரியவந்தது. அப்போது மல்ஹுரா பரிம்போரா என்ற இடத்தில் வீடு ஒன்றில் ஆயுதங்களை மறைத்துவைத்து இருப்பதாக நதீம் கூறினார்.

இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்புப் படையினர் மீது வீட்டில் மறைந்து இருந்த தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.ராணுவம் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. அதிகாலை வரை நீடித்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில் லஷ்கர் -இ - தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் நதீம் அப்ரார் உள்ளிட்ட 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இந்த சண்டையில் ராணுவ வீரர்கள் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.தீவிரவாதிகள் பதுங்கி இருந்த வீட்டில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.புல்வாமா மாவட்டத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரி, அவரது மனைவி ஆகியோரை தீவிரவாதி நதீம் தான் கொலை செய்ததாக கூறப்படும் நிலையில்,அவரை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.

Tags : Lashkar-e-Taiba ,Kashmir , நதீம் அப்ரார்
× RELATED ஒன்றிய அமைச்சருக்கு லஷ்கர் கொலை மிரட்டல்