×

2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் கூடங்குளம் 5, 6 அணு உலை கட்டுமானப் பணிகள் இன்று துவக்கம்

நெல்லை: நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியுடன் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதே வளாகத்தில் 3, 4 அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகளும் நடந்து வருகின்றன. கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்தில் 6 ஆயிரம் மெகாவாட், அதாவது 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 6 அணு உலைகள் அமைப்பது இந்திய அணுசக்தி துறையின் திட்டமாகும். அதன்படி 5, 6 அணு உலைகள் அமைப்பது தொடர்பாக இந்தியா - ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை, ஒப்பந்தங்கள் கையெழுத்து போன்ற பணிகள் நடந்து வந்தன. அனைத்துப் பணிகளும் முடிவடைந்ததை தொடர்ந்து 5, 6 அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் இன்று துவங்குகிறது. அணு உலைகள் அமைப்பதற்காக முதல் கான்கிரீட் அமைக்கும் பணிகள் இன்று காலை 11 மணிக்கு துவங்குகிறது.

இதற்கான கட்டுமானப் பணிகளை  இந்திய அணுசக்தி துறையின் செயலாளர் மற்றும் அணுசக்தி வாரியத்தின் தலைவர் கே.என்.வியாஸ் மும்பையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைக்கிறார். கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி இந்த நிகழ்ச்சியில் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் காட் போலே, 5, 6 அணு உலைகளுக்கான திட்ட இயக்குநர் சுரேஷ் மற்றும் கூடங்குளம் அணு மின் நிலைய மூத்த விஞ்ஞானிகள், ரஷ்ய விஞ்ஞானிகள் என முக்கிய அதிகாரிகள் மட்டும் கலந்து கொள்கின்றனர். கூடங்குளத்தில் தற்போது முதல் இரண்டு அணு உலைகள் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 3, 4 அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் கடந்த 2016ம் ஆண்டு துவங்கியது. இந்தப் பணிகளை 69 மாதங்களில், அதாவது 2022 - 23ம் ஆண்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.



Tags : Koodankulam , It can generate 2 thousand megawatts of electricity Construction work on Koodankulam 5 and 6 reactors begins today
× RELATED கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்...