சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி நேற்று முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்பை தொடர்ந்து நேற்று காலை முதல் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று காலை சென்னை வடபழனி முருகன் கோயிலில் தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளை மாநில அரசு எவ்வளவு பயன்படுத்தியது. எவ்வளவு வீணடித்தது என்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
நாங்கள் தேர்தல் செலவுக்கு வேட்பாளர்களுக்கு 4 கோடி கொடுத்தால் தானே அதைப்பற்றி விசாரிக்க முடியும். பாஜ சார்பில் வேட்பாளர்களுக்கு பணம் வழங்கவில்லை. எச்.ராஜா மீது நடைபெறும் விசாரணை உட்கட்சி விவகாரம் தான். புதுச்சேரியில் நேற்று முன்தினம் அமைச்சர்கள் பதவி ஏற்கும் போது ஒன்றிய அரசு என்று பயன்படுத்தியது குறித்து பின்னர் பேசுகிறேன். வேல் யாத்திரை நடத்தியபோது, பாஜ சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை தொடர்ந்து தமிழக அரசிடம் வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.