கோயினியா: கோபா கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் அணியின் தொடர் வெற்றிக்கு ஈகுவேடார் அணி ‘பிரேக்’ போட்டு டிரா செய்ததால் காலிறுதிக்கு முன்னேறியது. தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான கோபா கால்பந்து தொடரில் ஏ பிரிவில் காலிறுதிக்கு முன்னேறும் நாடுகள் முடிவாகி விட்டன. ஆனால் பி பிரிவில் பிரேசில் மட்டும் முதல் இடத்தை உறுதி செய்து காலிறுதிக்கு முன்னேறியது. கொலம்பியா காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தாலும் எந்த இடம் என்று தெரியாமல் காத்திருக்க வேண்டிய நிலைமை. அதேபோல் எஞ்சிய 3 அணிகளான பெரு, ஈகுவேடார், வெனிசுலா அணிகள் காலிறுதி வாய்ப்பில் நீடித்தன.
இந்நிலையில் பி பிரிவில் உள்ள அணிகளுக்கான கடைசி லீக் ஆட்டங்கள் நேற்று நடந்தன. தொடர்ந்து 3 வெற்றிகளை பெற்ற பிரேசில் கடைசி இடத்தில் இருந்த ஈகுவேடார் அணியுடன் மோதியது. பிரசேில் எளிதில் வெல்லும் என்ற எண்ணத்தில் ஈகுவேடார் மண்ணை தூவியது. பிரேசில் வீரர் யெடர் மிலிடாவோ 37 வது நிமிடத்திலும், பதிலுக்கு ஈகுவேடார் வீரர் ஏஞ்சல் மெனா 53வது நிமிடத்திலும் கோலடித்தனர். பிரேசில் ஆடி அசத்தினாலும் கூடுதல் கோலடிக்க முடியவில்லை. அதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. மற்றொரு ஆட்டத்தில் பெரு 1-0 என்ற கோல் கணக்கில் வெனிசுலாவை வென்றது. அதனால் வெனிசுலா தொடரில் இருந்து வெளியேறியது. பிரேசிலுடன் காலிறுதிக்கு பெரு, கொலம்பியா, ஈகுவேடார் அணிகள் முன்னேறின.