சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்றினால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் சில நிவாரண உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆனால் சமூக நலத்துறையால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டு தாய் அல்லது தந்தை ஆகியோரில் யாராவது ஒருவர் இறந்து, அந்த குடும்பத்துக்கு பொருளீட்டும் நபராக இருந்தால், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வரும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் பட்டியலில் அவர் பெயர் இருப்பின் அவர்களுக்கு வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற வழிகாட்டி நெறிமுறைகள் பயனாளிகளை குறைப்பதற்கான வழி என்றே மக்கள் கருதுகிறார்கள். மேலும் குடும்பத்தில் பொருளீட்டும் நபரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கிடையே பாகுபாட்டினை உருவாக்குவதாக அமையும். மேலும் இந்த நிவாரண உதவி என்பது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு, அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஒன்று. எனவே, இதில் பெற்றோர்களின் வேலைவாய்ப்பினை ஓர் அளவுகோலாக எடுத்து கொள்ள கூடாது. இதில் முதல்வர் தனி கவனம் செலுத்தி அனைத்து குழந்தைகளுக்கும் நிவாரண உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.