புதுடெல்லி : கொரோனா 2வது அலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் கங்கை நதியில் மிதந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரதீப் குமார் யாதவ் மற்றும்விஷால் என்பவர்கள் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் கங்கை நதியில் வீசப்படுகிறது.
இதனால் கிராமங்களிலும் கொரோனா பரவல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினையாகவும் இது தற்போதுமாறிவிட்டது. இவை அனைத்திற்கும் காரணம் அரசு அதிகாரிகள் தங்களது கடமைகளை சரிவர செய்யாதது தான். அதனால் துறை சார்ந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேப்போன்று ஆற்றில் அடித்து வரும் உடல்கள் அனைத்தையும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி மரணத்திற்கான காரணத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுக்களை விசாரிப்பதற்கான எந்த முகாந்திரம் இல்லை எனக்கூறி அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.