பாணாவரம் : பாணாவரம் அருகே ஆபத்தான நிலையில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாணாவரம் அடுத்த பள்ளமங்கலம் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சோளிங்கர்- காவேரிப்பாக்கம் சாலையோரத்தில் பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. இங்கிருந்து நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், கட்டிட தொழிலாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தினமும் பஸ், ஆட்டோ மூலம் பல்வேறு பணி நிமித்தமாக சென்று வருகின்றனர்.
இவ்வாறு பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பயணிகள் அடிக்கடி பஸ்கள் இல்லாததால், இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் பல மணி நேரம் காத்திருந்து செல்வது வழக்கம்.
இவ்வாறு பயணிகள் காத்திருக்கும் நிழற்கூடம், தற்போது முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பாதுகாப்பும் கேள்வி குறியாகியுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, நிழற்கூடத்தை சீரமைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.