×

சென்னை-பாரீஸ் முதல் வாராந்திர ஏர்பிரான்ஸ் விமான சேவை துவங்கியது

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்துக்கு நேற்று பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸிலிருந்து முதல் வாராந்திர ஏர்பிரான்ஸ் விமான சேவை துவங்கியது. நள்ளிரவு சென்னை வந்த விமானத்தில் பயணிகள், விமானிகள், விமானப் பணிப்பெண்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழியர்களுக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை அதிகாலை இந்த விமானம் பாரீஸ் புறப்பட்டு செல்கிறது.  பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ், சார்லஸ் டி கோலே விமானநிலையத்தில் இருந்து நேற்று காலை 10.25 மணியளவில் 111 பயணிகள், 19 விமான ஊழியர்களுடன் ஏர்பிரான்ஸ் விமான நிறுவனத்தின் முதல் வாராந்திர போயிங் விமானம் சென்னைக்கு புறப்பட்டது.

இந்த விமானம் நள்ளிரவு 12.25 மணியளவில் சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு வந்து சேர்ந்தது. இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டு தேசியக்கொடிகளுடன் வந்திறங்கிய விமானத்தை சென்னை விமானநிலைய அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர். அதில் பயணம் செய்த பயணிகள், விமானிகள், விமான பணிப்பெண்கள், பொறியாளர்கள் உள்பட அனைவருக்கும் பூங்கொத்து வழங்கி வரவேற்பு அளித்தனர்.

அதன்பின் அந்த விமானத்தில் வந்த ஊழியர்கள் அனைவரும் ஓய்வுக்காக, சென்னை நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்குக் கிளம்பிச் சென்றனர். இன்று ஓய்வுக்குப் பின், நாளை அதிகாலை 1.20 மணியளவில் சென்னை விமானநிலையத்தில் இருந்து ஏர்பிரான்ஸ் விமானம் பாரீஸ் நகருக்கு புறப்பட்டு செல்கிறது. இது, சென்னை-பாரீஸ் நகருக்கு இடையே இயக்கப்படும் புதிய வாராந்திர பயணிகள் விமானமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Chenne-Paris , Chennai-Paris, Airlines
× RELATED மோடி அலை எதுவும் இல்லை, விஷம்தான் பரவியுள்ளது: காங்கிரஸ் விமர்சனம்