மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசில், உள்துறை அமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனில் தேஷ்முக் இருந்தார். இவர் மும்பை விடுதிகள், பார்களில் இருந்து மாதம் ₹100 கோடி லஞ்சம் பெற்று தரும்படி போலீஸ் துணை கமிஷனர் வாசேவிடம் கூறியதாக, மும்பையின் அப்போதைய போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் குற்றம்சாட்டினார். இதுபற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதால், தேஷ்முக் பதவி விலகினார்.
இவர் மீது அமலாக்கத் துறையும் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது. இநத விசாரணைக்கு நேற்று வரும்படி தேஷ்முக்கிற்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் வேறு தேதியில் ஆஜராக அனுமதி கோரி கடிதம் அனுப்பி உள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கில் தேஷ்முக்கின் தனி செயலாளர் சஞ்சீவ் பாலண்டே, தனி உதவியாளர் குந்தன் ஷிண்டே ஆகியோரை அமலாக்கத் துறையினர் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.