×

அவதூறு ஆசாமி கிஷோர் கே.சாமி புழல் சிறையில் அடைப்பு

சென்னை: சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் கிஷோர் கே.சாமி. இவர், பேரறிஞர் அண்ணா, கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பத்திரிகையாளர்களை சமூக வலைதளத்தளங்களில் தொடர்ந்து அவதூறாக பேசி, அப்பதிவை பரப்பி வந்தார். இவர், அதிமுக ஆதரவாளர் என்பதால், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தும், கடந்த அதிமுக ஆட்சியில் அவர் மீது, இதுதொடர்பாக எவ்வித நடவடிக்கை  எடுக்கவில்லை. இந்நிலையில், தமிழக முதல்வராக, மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அதன் பின்னரும், முதல்வர் உள்ளிட்ட பல தலைவர்கள் குறித்து, அவதூறான கருத்துகளை பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் கிஷோர் கே.சாமி பதிவிட்டு வந்தார். இதுகுறித்து, திமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ஒருவர், சங்கர் நகர் போலீசில் புகார் செய்தார்.

அதன்படி கடந்த 14ம் தேதி கிஷோர் கே.சாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து, பெண் பத்திரிகையாளர் ஒருவரை பற்றி டிவிட்டரில் ஆபாசமாக பதிவிட்டார். இந்த புகாரிலும், போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கிஷோர் கே.சாமியை கடந்த 16ம் தேதி கைது செய்தனர். மேலும் கடந்த 2019ம் ஆண்டு தனியார் ஆங்கில தொலைக்காட்சி நிருபரையும் அவதூறாக பதிவிட்டு மிரட்டல் விடுத்தார். ஆனால் அரசியல் பின்புலம் காரணமாக, அவரை போலீசார் கைது செய்யவில்லை. இந்நிலையில் அந்த வழக்கில்  கடந்த 2 தினங்களுக்கு முன், கிஷோர் கே.சாமியை கைது செய்தனர். ஏற்கனவே 3 வழக்குகளில் கைதாகியிருக்கும் அவர் மீது, நடிகை ரோகிணி உள்பட பலர் புகார் அளித்தனர்.

மேலும் சங்கர் நகர் போலீஸ் நிலையத்திலும் பல வழக்குகள் குவிந்தது. இதையடுத்து, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய செங்கல்பட்டு கலெக்டருக்குபரங்கிமலை துணை கமிஷனர் பரிந்துரை செய்தார். கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து, கிஷோர் கே.சாமி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Asami Kishore K. Sami ,Pulhal , Defamation Asami Kishore K. Sami imprisoned in Pulhal jail
× RELATED அம்பத்தூர்-புழல் நெடுஞ்சாலையில்...