×

கொரோனா பரிசோதனை என்ற பெயரில் கொலை திட்டமா?: ஈரோடு அருகே மர்மநபர் கொடுத்த மாத்திரையை உண்ட பெண் பலி; 3 பேர் கவலைக்கிடம்..!!

ஈரோடு: ஈரோடு அருகே கொரோனா பரிசோதனை செய்யவந்ததாக கூறி அடையாளம் தெரியாத நபர் கொடுத்த மாத்திரையை சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னிமலை அருகே கே.ஜி. வலசு பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் விவசாயி கருப்பணன். இவரது வீட்டிற்கு காலையில் வந்த இளைஞர் ஒருவர் கொரோனா பரிசோதனை செய்வதற்காக வந்துள்ளதாக கூறியுள்ளார். 


பரிசோதனைகளுக்கு முன்பு சில மாத்திரைகளை சாப்பிட வேண்டும் என்று கோரி அவர் கொடுத்த மாத்திரைகளை கருப்பணன், அவரது மனைவி மல்லிகா, மகள் தீபா மற்றும் தோட்ட வேலைக்கு வந்த குப்பம்மாள் ஆகியோர் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பரிசோதனை செய்வதாக வந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்ட நிலையில், மாத்திரை சாப்பிட்ட 4 பேர் திடீரென மயங்கி விழுந்துள்ளனர். 


அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் மல்லிகா செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 3 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெறுகிறார்கள். சம்பவம் குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 


கருப்பணன் இல்லத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி மாத்திரை கொடுத்த நபரை பிடிக்க போலீசார் தீவிரம்காட்டி வருகின்றனர். கருப்பணன் குடும்பத்தினரை கொலை செய்வதற்காக யாரேனும் சதித்திட்டம் தீட்டினார்களா? என்ற கோணத்திலும் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Corona Experiment ,Erode , Corona test, Erode, mysterious, pill girl killed
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!