திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) விஞ்ஞானியாக பணிபுரிந்தவர் நம்பி நாராயணன். 1994ம் ஆண்டு விண்வெளி ஆய்வு ரகசியத்தை வெளிநாட்டுக்கு இவர் வழங்கியதாக கைது செய்யப்பட்டார். பின்னர், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. பல ஆண்டுகளாக இதை விசாரித்த சிபிஐ, நம்பிநாராயணன் நிரபராதி என்று எர்ணாகுளம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து, அவர் விடுவிக்கப்பட்டார். பின்னர், தன்னை கைது செய்ததில் உள்ள சதி திட்டம் பற்றி விசாரிக்க உத்தரவிடும்்படி உச்ச நீதிமன்றத்தில் இவர் வழக்கு தொடர்ந்தார். இதை ஏற்ற உச்ச நீதிமன்றம், கடந்த ஏப்ரலில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், தனது விசாரணை அறிக்கையை திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ குழு தாக்கல் செய்துள்ளது. அதில், நம்பி நாராயணனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ததில் ஒய்வு பெற்ற முன்னாள் டிஜிபி.க்களான சிபிமேத்யூ, ஸ்ரீகுமார் மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் உள்பட 18 பேர் சதி செய்ததாக கூறப்பட்டுள்ளது. இதில், 7 பேர் கேரள போலீசையும், மற்ற 11 பேர் மத்திய உளவுத்துறையையும் சேர்ந்தவர்கள். இதனால், இவர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு ள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் சிபிமேத்யூ நேற்று முன்ஜாமீன் பெற்றார்.