சென்னை: நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வி அடைந்தது. ஒரு தொகுதியிலும் அக்கட்சி வேட்பாளர் ஜெயிக்கவில்லை. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கட்சி தலைவர் கமல்ஹாசன் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் கட்சியில் பல்வேறு பிரிவுகளில் பதவி வகித்து வந்த பலர், ஆளாளுக்கு கமல் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தி, கூண்டோடு விலகினர். இதனால், மநீம கூடாரம் காலியானது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மீதியுள்ள நிர்வாகிகளுடன் கமல் தனித்தனியே ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், தேர்தலில் மநீம கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது ஏன் என்பது குறித்து விசாரித்து, அவர்கள் அளித்த பதில்களை குறிப்பெடுத்துக் கொண்டார்.
இனி கட்சியை வலுப்படுத்தவும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று காலை 11 மணியளவில் இணையம் மூலம் கட்சி நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை நடத்துகிறார் என்று, கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். இதன் முடிவில் கட்சியின் புதிய நிர்வாகிகளை கமல் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் விரைவில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மநீம கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.