×

பாலியல் புகாரில் கைதாகியுள்ள ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சென்னை: பாலியல் குற்றச்சாட்டில் கைதான சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மாணவிகளின் செல்போன்களுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்பட்ட புகாரில் ராஜகோபாலன் ஏற்கனவே கைதாகியிருந்தார். சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி தனியார் பள்ளியில் வணிகவியல் ஆசிரியர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த மாதம் 24ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பிறகு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் போலீஸ் காவலில் எடுத்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அசோக்நகர் அனைத்து மகளிர் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அவரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தைரியமாக புகார் அளியுங்கள் என காவல்துறை சார்பில் தொலைபேசி எண்ணையும் சென்னை காவல்துறையினர் வெளியிட்டனர். கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் பள்ளியின் முதல்வர், தாளாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. 8 மணி நேரம் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் திவால் உத்தரவிட்டுள்ளார். தற்போது ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள உத்தரவு சிறை துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் ராஜகோபாலன் மீது அடுத்தக்கட்டமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Rajagopalan , teacher, rajakopalan, act
× RELATED நடைபயிற்சி செய்தவரிடம் இளம்பெண்ணுடன்...