×

'தனியார் கல்லூரிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும், மீறினால் கடும் நடவடிக்கை'!: அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை..!!

சென்னை: தனியார் கல்லூரிகளில் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரித்துள்ளார். சென்னை தரமணியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் கல்லூரிகளில் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்திருப்பதை சுட்டிக்காட்டினார். 


இதனை மீறி கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக தெரியவந்தால் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். முன்னதாக சென்னை தரமணியில் மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் 2021 - 22ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இணையவழியை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார். 


கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று விண்ணப்பிப்பதை தவிர்த்து ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த இணையதள சேவை தொடங்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். இதன் மூலம் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 18,120 இடங்களுக்கு மாணவர்கள் ஜூலை 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 


11ம் வகுப்பில் சேர்வதற்கு என்ன தகுதியோ அதே தகுதி தான் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேருவதற்கும் என்றார் அவர். சி.பி.எஸ்.சி. மாணவர்களுக்கு அடுத்த மாதம் 31ம் தேதி தான் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட இருப்பதால் அந்த நாளுக்கு பின்னர் தான் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று அமைச்சர் பொன்முடி கூறியிருக்கிறார். 



Tags : Minister ,Bonhairi , Private College, 75% Fees, Minister Ponmudi
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...