சென்னை: அண்ணா, கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை சென்னை கே.கே.நகரை சேர்ந்த கிஷோர் கே.சாமி என்பவர் பதிவு செய்து வந்தார். இதுகுறித்து திமுக ஐடி பிரிவு நிர்வாகி சங்கர் நகர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கிஷோர் கே.சாமி செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் பெண் பத்திரிகையாளர் புகாரின் அடிப்படையிலும் கடந்த 16ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில், 2019ம் ஆண்டு தனியார் ஆங்கில தொலைக்காட்சி நிருபரின் குடும்பத்தை கிஷோர் கே.சாமி சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக விமர்சித்தார்.
இதுகுறித்து நிருபர் அளித்த புகாரின்படி கிஷோர் மீது 2 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று கைது செய்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் 2 வழக்குகள், சங்கர் நகர் போலீசார் ஒரு வழக்கு என தற்போது மூன்று வழக்குகளில் கிஷோர் கே.சாமிகைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தலைவர்கள், பத்திரிகை நிருபர்கள் பற்றி அவதூறாக பேசிய கிஷோர் கே.சாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் குண்டாஸ் சட்டம் போடப்பட்டுள்ளது.