×

நீலகிரி மாவட்டம் உதகையில் 53 வயது பெண்ணை கொலை செய்துவிட்டு கொரோனாவால் இறந்ததாக நாடகமாடிய கியூ பிரிவு எஸ்.ஐ.!: போலீசார் விசாரணை..!!

நீலகிரி: உதகையில் 53 வயது பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உதகையில் இருக்கக்கூடிய கியூ பிரிவு காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் முஸ்தபா. 55 வயதான இவருக்கும் உதகை அருகே உள்ள காந்தல் புதுநகர் பகுதியை சேர்ந்த மாகி என்ற 53 வயதான பெண்ணுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. 


முஸ்தபா, மாகியை தனியாக வீடு எடுத்து தங்க வைத்திருந்ததும் தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில் இன்று காலை முஸ்தபா, மாகியின் உறவினர்களை  தொடர்புகொண்டு கொரோனா தாக்கத்தின் காரணமாக மாகி இறந்துவிட்டதாகவும் எனவே உடலை வீட்டிற்கு கொண்டு வந்து கொடுப்பதாகவும் கூறி காரில் கொண்டு சென்று உடலை வழங்கியுள்ளார். வாகனத்தில் இருந்து இறக்கும் போது மாகியின் உடலானது முழுவதும் துணியினால் சுற்றப்பட்டிருந்தது. 


இதையடுத்து, உறவினர்கள் மாகியின் உடலை தங்களது வீட்டிற்கு கொண்டு சென்று பார்த்த போது முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயம் இருந்தது சந்தேகத்தை தூண்டியுள்ளது. தொடர்ந்து மாகியின் உறவினர்கள் உடனடியாக உதகையில் உள்ள ஜி1 காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததில் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. 


தற்போது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் உடலை ஒப்படைத்த உதவி ஆய்வாளர் முஸ்தபாவை பிடித்து காவல்துறையினர் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் தகாத உறவு இருந்த நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 


உடலை மாகியின் உறவினர்கள் இடையே ஒப்படைக்கும் போது கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், இது குறித்து வெளியில் யாருக்கும் தெரிய வேண்டாம் என்றும் உடனடியாக உடலை அடக்கம் செய்யுமாறும் முஸ்தபா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.



Tags : SI ,Udagai, Nilgiris district , Assist, woman, murder, corona, s.i.
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...