வருசநாடு : வருசநாடு அருகே, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சாலை வசதி செய்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்திற்கு சாலை வசதி செய்து தரப்படவில்லை. இந்த கரடு, முரடாக இருப்பதால், சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து தும்மக்குண்டு கிராமவாசிகள் ஆறுமுகம், விவேக் முருகன் ஆகியோர் கூறுகையில், ‘‘தும்மக்குண்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போடுவதற்கும், சிகிச்சை பெறுவதற்கும் இங்கு வந்து செல்கின்றனர். ஆனால் சுகாதார நிலையத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் நடந்து செல்வோர் சிரமமடைகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி, சுகாதார நிலையத்திற்கு தார்ச்சாலை அமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.