×

பர்கூர் வனப்பகுதியில் பெண் யானை பலி

அந்தியூர் :  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கோயில்நத்தம் காவல் சுற்று வனப்பகுதியில், நேற்று முன்தினம் பர்கூர் வனக்களப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வடபர்கூர் வனப்பகுதி கெளரிமடுவு என்னும் இடத்தில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்ததை கண்டனர்.இது குறித்து, மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜு விஸ்வநாதனுக்கு தகவல் கொடுத்தனர்.

மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி, பர்கூர் அரசு கால்நடை உதவி மருத்துவர் சுரேஷ் மற்றும் பர்கூர் வனச்சரகர்  மணிகண்டன், வனவர் விஜயகுமார், வனக் காப்பாளர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த காட்டு யானையின் பிரேதத்தை உடற்கூறு ஆய்வு செய்தனர். அதன்பின், பிரேதத்தை உயிர் சுழற்சி முறையில் மற்ற மாமிச விலங்குகளின் உணவுக்காக அங்கேயே விட்டு வந்தனர். இறந்த காட்டு யானைக்கு சுமார் 30 வயது இருக்கலாம் எனவும், கால் இடறி விழுந்து இறந்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் கூறினர்.

Tags : Bargur forest , Anthiyur,Erode,Bargur,Forest Department,Elephant
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...