ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் தற்போது வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, சிறுத்தை மற்றும் கரடி போன்றவைகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இவைகள் தேயிலை தோட்டம் மற்றும் மக்கள் வாழும் பகுதிகளுக்கு வந்துச் செல்வது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் ஊட்டி அருகேயுள்ள மஞ்சக்கொம்பை மேல் டெரமீயா எஸ்டேட் பகுதியில் ஒரு சிறுத்தை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து, அங்கு குந்தா வனச்சரகத்தை சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்த சிறத்தை 9 மாத பெண் சிறுத்தை குட்டி என்பது தெரிய வந்தது. கோவை உதவி வனப்பாதுகாவலர் ராஜேஷ், கால்நடை மருத்துவர்கள் நந்தினி மற்றும் ராஜா ஆகியோர் முன்னிலையில் இறந்த சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், வேறு விலங்குகள் தாக்கியதில் சிறுத்தை இறந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.