×

ஆந்திர மாநிலம் கடப்பாவில் சோகம்!: பெற்றோர் கண்முன்னே பென்னா நதியில் மூழ்கி 4 சிறுவர்கள் பரிதாப பலி..!!

கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் வல்லூர் அருகே உள்ள பென்னா நதியில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கடப்பாவில் உள்ள வெல்லமண்டி தெருவை சேர்ந்த பர்வேஸ் கான் தம்பதியினருடைய மகன், மகள் மற்றும் உறவினர்கள் என சுமார் 12 பேர் காரில் சுற்றுலாவிற்காக பென்னா நதிக்கு அருகே உள்ள புஷ்பகிரி கோவிலுக்கு சென்றுள்ளனர். 


அங்கு அனைவரும் ஒன்றாக மணல் திட்டுகளில் விளையாடிக் கொண்டிருந்த போது சிறுவர்கள் மட்டும் ஆற்றில் இறங்கி குளிக்க சென்றுள்ளனர். அச்சமயம் பாத்தான் அப்துல், அப்துல் ரசித், அனுஷ்கான், வாகித்கான் ஆகிய 4 சிறுவர்கள் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்த போது நீரின் ஆழத்திற்குள் சென்றுள்ளனர். எதிர்பாராத விதமாக அவர்கள் நால்வரும் நீரில் அடித்து சென்றுள்ளனர். 


இவர்களை மீட்க பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தேடிய நிலையில் யாரும் கிடைக்காததால் போலீசாருக்கும், உள்ளூரை சேர்ந்த நீச்சல் வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இரவு முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில், 4 சிறுவர்களில் 3 பேரின் உடல்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. 


ஆற்றில் மாயமான வாகித்கான் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெற்றோர் கண்முன்னே குழந்தைகள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் கடப்பாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 



Tags : Kadapa, Andhra Pradesh ,Penna river , Kadapa, Penna River, boys killed
× RELATED பொங்கல் பண்டிகையின் 5ஆம் நாளான இன்று...