ரியோ டி ஜெனிரோ: கோபா கோப்பை கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் பிரேசில் காலிறுதிக்கு முன்னேறி உள்ளது. தொடரின் பி பிரிவு ஆட்டங்கள் நேற்று நடந்தன. நடப்பு சாம்பியன் பிரேசில்-கொலம்பியா அணிகள் மோதின. முன்னணி அணி என்பதை ஆட்டம் முழுவதும் வெளிப்படுத்தியது பிரேசில். ஆனால் முதல் கோலை கொலம்பியா ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் போட்டது. அந்த அணியின் லூயிஸ் டியஸ் ‘ரிவர்ஸ் கிக்’ முறையில் கோல் அடித்து அசத்தினார். அதன்பிறகு 78வது நிமிடத்தில் பிரேசிலின் ரோபெர்டோ கோல் அடித்தார். அதனால் இரு அணிகளும் சமநிலை பெற்றன. கூடுதல் நேரத்தில் காஸ்மிரோ ஒரு கோல் அடிக்க பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று ஹாட்ரிக் வெற்றியை சுவைத்தது.
கூடவே பி பிரிவில் முதல் இடத்தை உறுதி செய்ததுடன் காலிறுதிக்கும் முன்னேறியது. கோயனியாவில் நடந்த பி பிரிவு ஆட்டத்தில் ஈகுவேடார்-பெரு அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தன. அதனால் பிரேசிலிடம் தோற்ற கொலம்பியாவும் காலிறுதிக்கு தகுதிப் பெற்றது.