×

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை செயல்படுத்த அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்துவது குறித்து துறை அதிகாரிகளோடு விரிவாக ஆலோசனை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பென்னாகரம் ஜி.கே.மணி (பாமக) பேசியதாவது: ஆளுநர் உரை 48 பக்கங்களில் 69 பத்தியாக இடம்பெற்றுள்ளது. சமூக நீதிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.  அதற்கு வித்திட்டவர் பாமக நிறுவனர் ராமதாஸ். தமிழகம்தான் சமூக நீதியின் தொட்டில். கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்றாலும் தடை ஆணை இல்லை.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள்ள 20 சதவீதம் ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என்று ஜி.கே.மணி இங்கே பேசிக் கொண்டிருக்கிறார். ஏற்கெனவே, இரண்டு நாட்களுக்கு முன்பு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பியிருக்கிறார். அதிலே அவர் பல்வேறு பிரச்னைகளை சுட்டிக்காட்டி, இதனுடைய முக்கியத்துவத்தை, இதில் உள்ள பிரச்னைகளை எல்லாம் எடுத்துச்சொல்லி, நிறைவாக குறிப்பிடுகிறபோது, ‘தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான தமிழ்நாடு சட்டம் எண் 8/2021-ஐ விரைந்து செயல்படுத்தும்படியும், அதற்கு தேவையான அரசாணைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உடனடியாகப் பிறப்பிக்கும்படியும் கேட்டிருக்கிறார்.

நான் இதையெல்லாம் அடிப்படையாக வைத்து இங்கே சொல்ல விரும்புவது, ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கொரோனா தொற்றை குறைப்பதற்காக இரவு - பகல் பாராது கவனம் செலுத்தி, இப்போதுதான் கொஞ்சம் மூச்சுவிட ஆரம்பித்திருக்கிறோம்.  ஆகவே, உறுப்பினருடைய கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய துறையினுடைய அதிகாரிகளோடு விரிவாக ஆலோசனையும், ஆய்வும் நடத்தி நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

Tags : Vanni ,Tamil Nadu ,Chief Minister ,MK Stalin , Education, Employment, Reservation, Counseling, MK Stalin
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...