சென்னை: பாலிவுட்நடிகை கங்கனா ரனவத், இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்தியா என்ற பெயர் அடிமைப் பெயர் போல் இருக்கிறது. உடனே அதை மாற்றி, நமது நாட்டின் பழைய பெயரான பாரதம் என்பதை வைக்க வேண்டும். நகர்ப்புற வளர்ச்சியில் நாம் உயர்ந்தாலும், மேற்கத்திய உலகின் மலிவான நகல் போன்று இல்லாமல், வேதங்கள் மற்றும் பகவத் கீதை, யோகாவில் ஆழமாக வேரூன்றி இருந்தால், உலகின் மிகப்பெரிய நாடாக நாம் வெளிப்படுவோம். எனவேதான் அடிமைப் பெயரான இந்தியாவுக்கு பதிலாக பாரத் என்று மாற்ற முடியுமா என்கிறேன்.
இந்தியா என்ற அடிமைப் பெயரை பிரிட்டீஷ்காரர்கள் நமக்கு கொடுத்தார்கள். அதாவது, சிந்து நதியின் கிழக்குப் பகுதியை குறிக்கும் வகையில் இது கொடுக்கப்பட்டது. இதுபோன்றா பெயர் வைப்பார்கள்? உங்கள் குழந்தைக்கு சின்ன மூக்கு, இரண்டாவதாக பிறந்தவன் என்றா பெயரிட்டு அழைக்க முடியும்? பிஎச் (பவ்), ரா (ராக்), தா (தாள்) என்ற பெயர்கள் இணைந்ததே பாரதம். நாம் அடிமைப்படுத்தப்படுவதற்கு முன்பாகவே நாம் கலாசாரம் மிகுந்தவர்களாகவும், நாகரீகம் மிகுந்தவர்களாகவும் இருந்தோம். எனவே, பழைய பெயரான பாரத் என்று மாற்றி, இழந்த பெருமையை மீட்போம்.