×

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பெண் போலீசாரிடம் போதை ஆசாமி அத்துமீறல்

புழல்: புழல் ஜிஎன்டி சாலை சிக்னலில் நேற்று மாலை புழல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செங்குன்றம் பாடியநல்லூர் பிள்ளையார் கோயிலை சேர்ந்த கார்த்திக்(38) என்ற நபர் முகக்கவசம் அணியாமல் பைக்கில் வாகனத்தில் வந்துள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார், அவரது பைக்கை  தடுத்து நிறுத்தி,  அவரிடம் இதுகுறித்து கேட்டனர். அப்போது, அவர், பெண் போலீசாரை அவதூறாகப் பேசியதோடு, அவர்களிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்றார். பின்னர், அவரை தனியாக அழைத்து உதவி ஆய்வாளர் மனோகரன் விசாரணை செய்தார். அதில் அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அவரிடம் லைசென்ஸ், இன்ஷூரன்ஸ் குறித்த ஆவணங்களை சரிபார்க்க கேட்டபோது, அவர் பெண் போலீசாரை மிரட்டும் தொனியில் பேசினார். மேலும், “என் மீது வழக்கு பதிவு செய்தால், கடுமையான விளைவுகளை சந்திப்பீர்கள்.  வாகன சோதனையில் ஈடுபடும் நீங்கள் வெறும் காவலர்கள் தானே. நீங்கள் என்ன உயர் அதிகாரிகளா, என்னை கேள்வி கேட்பதற்கு,” என்று அவர்களை மிரட்டும் வகையில் பேசினார்.

மேலும், “நான் பிரபல ரவுடியின் கூட்டாளி. என் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. நீங்கள் என்னை ஒன்றும் செய்ய முடியாது. நான் இந்த வழக்கில் உள்ளே சென்றாலும் வெளியே வந்து உங்களை பழிவாங்குவேன்,” என போலீசாரை மிரட்டினார். குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தது பரிசோதனையில் உறுதியானதால், கார்த்திக்கிடம் இருந்து பைக்கை  பறிமுதல் செய்து, ₹10,500 அபராதம் செலுத்துவதற்கான ரசீதை கொடுத்து அனுப்பி வைத்தனர். இதனால் புழல் சிக்னலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Asami , Involved in vehicle testing Drug addict assault on female police officer
× RELATED அபுதாபியில் இருந்து சென்னை வந்த...