விருதுநகர் : விருதுநகரில் உள்ள குல்லூர்சந்தை அணையில் நகராட்சி, ஊராட்சிகளின் கழிவுநீர் கலப்பதால் சாக்கடையாக மாறி வருகிறது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
விருதுநகர் வழி செல்லும் கவுசிகா ஆற்றில் குல்லூர்சந்தை அணை விருதுநகர் நகராட்சி, ரோசல்பட்டி, சிவஞானபுரம், கூரைக்குண்டு, பாவாலி ஊராட்சிகளின் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் விவசாயத்திற்கு கட்டப்பட்ட அணை, கடந்த பல ஆண்டுகளாக சாக்கடையாக மாறி வருகிறது. அணைநீர் மாசடைந்ததால் விவசாயத்திற்கு பயன்படுத்த இயலாமல் உள்ளது. அணையை சுற்றிய பகுதிகளில் நிலத்தடி நீரும் மாசடைந்து விட்டது.
பல ஆயிரம் ஏக்கரிலான விவசாய நிலங்கள் தரிசாகி கிடக்கின்றன. நகராட்சியில் பாதளாச்சாக்கடை திட்டம் 15 ஆண்டுகளாக முழுமை பெறாத நிலையில் நகரின் கழிவுநீர் கௌசிகா ஆற்றில் விடப்பட்டு, அணையில் கலந்து வருகிறது. குல்லூர் சந்தை அணையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி பாதாளச் சாக்கடை திட்டத்தில், சுற்றுப்பகுதி ஊராட்சிகளின் கழிவுநீரை இணைத்து சுத்திகரித்து விட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.