வருசநாடு : கடமலை-மயிலை ஒன்றியத்தில் எலுமிச்சம் பழம் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பழங்களை தரம் பிரிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடமலை-மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டமனூர், கடமலைக்குண்டு மயிலாடும்பாறை, தங்கம்மாள்புரம், நரியூத்து, வருசநாடு, தும்மக்குண்டு, வாலிப்பாறை ஆகிய பகுதிகளில் எலுமிச்சை பறிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பழங்களை கொள்முதல் செய்ய மொத்த வியாபாரிகளும், சில்லரை வியாபாரிகளும் போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது.
எலுமிச்சை பழம் விலை தற்போது ஒரு கிலோ ரூ.20 முதல் 25 ரூபாய் வரை விற்பனையாகிறது. பழங்களை மூன்று தரங்களாக பிரித்து சந்தைகளுக்கு அனுப்புகின்றனர். வியாபாரிகள் கொள்முதலுக்காக விவசாயிகளுக்கு அட்வான்ஸ் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.இது குறித்து நரியூத்து விவசாயி அண்ணாமலை கூறுகையில், ‘எலுமிச்சை சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் உரம், பூச்சி, மருந்து விலை அதிகரித்துள்ளது. பழத்திற்கு விலை கூடினால் மட்டுமே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். இல்லாவிடில் இழப்பு ஏற்படும். எனவே, எலுமிச்சை விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றார்.