×

நான்கு மாதம் ஜாமீன் கேட்டு பேரறிவாளன் வழக்கு 3 வாரம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: நான்கு மாதம் ஜாமீன் வழங்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தரப்பில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘என்.டி.ஏ விசாரணை நடத்திய ராம்கிஷோர் என்பவரது வழக்கில் அவருக்கு நான்கு மாதம் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் முன்னதாக தீர்ப்பு வழங்கியது. அந்த உத்தரவை அடிப்படையாகக் கொண்டு எனக்கும் நான்கு மாதம் ஜாமீன் வழங்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி வினீத் சரண் மற்றும் தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பாரி வேந்தன் மற்றும் பிரபு ஆகியோர், ‘‘மேற்கண்ட வழக்கு விவகாரத்தில் பேரறிவாளனுக்கு தமிழக அரசு தரப்பில் 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. அதனால் விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும். அதற்கான கடிதமும் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’’ என நீதிபதிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களது கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கை மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.


Tags : Perarivalan , Perarivalan's case adjourned for 3 weeks seeking four months bail
× RELATED பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மார்ச் மாதம் விசாரணை!!