×

அதிமுக ஆட்சியில் போலி ஆவணங்களை உருவாக்கி வேளாண்மைத்துறையில் 1000 கோடிக்கு ஊழல்: 3 முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கும் தொடர்பு : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை கோரி வழக்கு

மதுரை: அதிமுக ஆட்சியில் வேளாண்மைத்துறையில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் ஒருங்கிணைந்த மணப்பாறை தாலுகா மானாவாரி மற்றும் இறவை பாசனதாரர்கள் மற்றும் விவசாயிகள் சங்க தலைவர் அப்துல்லா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு வேளாண்மைத்துறை இயக்குநராக கடந்த 2016 முதல் 2021 வரை தட்சிணாமூர்த்தி ஐஏஎஸ் என்பவர் பணியாற்றினார். இவர், வேளாண்துறை முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு நெருக்கமானவர். விவசாயிகளிடம் இருந்து விதை கொள்முதல் செய்ததாக போலி பட்டியல் தயாரித்து மோசடி செய்துள்ளனர். தாமோதரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, துரைக்கண்ணு ஆகியோர் வேளாண்மைத்துறை அமைச்சர்களாக இருந்த காலத்தில் பயோ பூச்சிகொல்லி மற்றும் பயோ உரம் உள்ளிட்டவை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்வதற்கான உரிமம் விதிகளை மீறி வழங்கப்பட்டுள்ளது. தரம் குறைந்த உரம் விற்பனையில் அதிகளவு லஞ்சம் கைமாறியுள்ளது.

 ஆத்மா திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனத்திற்கான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உணவு வழங்குவதிலும் பெரும் முறைகேடு நடந்துள்ளது. ரூ.60 மதிப்புள்ள உணவை ரூ.100க்கு வாங்கியுள்ளனர்.   இந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐஏஎஸ் அதிகாரி தட்சிணாமூர்த்திக்கு எதிராக ஏற்கனவே அளிக்கப்பட்ட புகார் இன்னும் நிலுவையில் உள்ளது. இதுவரை எந்த மேல் நடவடிக்கையும் இல்லை. இதேபோல் விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களில் இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர் உள்ளிட்ட பலரும் இணைந்து முறைகேட்டிலும், ஊழலிலும் ஈடுபட்டுள்ளனர். நுண் உரம், ஜிங் சல்பேட் மற்றும் தானிய விதைகள் மானியத்தில் வழங்கும் திட்டத்திலும் கடந்த 2016-2021 வரை பெரும் முறைகேடு நடந்துள்ளது. இதற்கான டெண்டர்களில் பெருமளவு ஊழல் நடந்துள்ளது. அதிகாரிகள் பணி நீட்டிப்பிலும் தவறு நடந்துள்ளது. குறுவை காலத் திட்ட டெண்டரில் பினாமி நிறுவனங்கள் பயனடைந்துள்ளன. தனிநபர்களுக்கு டிராக்டர் வழங்கும் திட்டத்திலும் முறைகேடு நடந்துள்ளது. தரம் குறைந்த உரம் வழங்கியது தொடர்பாகவும் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டது.

விவசாயிகள், விவசாய விளைபொருட்கள், கொள்முதல் உள்ளிட்ட விபரங்களை சேமித்து வைப்பதற்காக டேப்ெலட்கள் வாங்கப்பட்டன. ஐஎஸ்ஐ முத்திரையில்லாத, தரம் குறைந்த டேப்ெலட்கள் மற்றும் கணினி பொருட்கள் வாங்கப்பட்டன. தரம் குறைந்த சீன தயாரிப்புகளை வாங்கி பெருமளவு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த டேப்லெட் மற்றும் கணினிக்கள் பெரும்பாலும் உபயோகமற்ற நிலையில் உள்ளன. தேர்தல் நடத்தை விதிகளை மீறி முந்தைய அதிமுக அரசிற்கு ஆதரவாக புயல் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2013ல் இருந்து வேளாண்மைத்துறை முன்னாள் இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக போலி ஆவணங்கள் உருவாக்கியுள்ளனர்.

குறிப்பாக சொட்டுநீர் பாசன கருவிகள் வாங்கியது, இயந்திர கொள்முதல், விதை கொள்முதல், பிகோ கேமரா கொள்முதல்,  டேப்லெட் மற்றும் கணினி பொருட்கள் வாங்கியது, நீர்வடி மற்றும் நில மேம்பாட்டு திட்டம், ஆத்மா திட்டம், நீர்ப்பாசன திட்டம், உள் கொள்முதல்திட்டம், உழவர் உற்பத்தியாளர் குழு திட்டம், டெல்டா மாவட்ட குறுவை மற்றும் சம்பா குழு திட்டம், விதை கொள்முதல் திட்டம், பயிர் காப்பீட்டு திட்டம் உள்ளிட்டவற்றில் அதிகளவு முறைகேடு நடந்துள்ளது. எனவே, இந்த மோசடி மற்றும் முறைகேடு தொடர்பாக விசாரித்து தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் மனுவில் தொடர்புள்ள அதிகாரிகளை எதிர்மனுதாரராக சேர்த்து மனு செய்யுமாறு கூறி விசாரணையை தள்ளி வைத்தனர்.

* தாமோதரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, துரைக்கண்ணு வேளாண்மை அமைச்சர்களாக இருந்த காலத்தில் பெரும் முறைகேடு.
* பயோ பூச்சிகொல்லி மற்றும் பயோ உரம் உள்ளிட்டவை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்வதற்கான உரிமம் விதிகளை மீறி வழங்கப்பட்டுள்ளது.
* ஆத்மா திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனத்திற்கான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.
* தரம் குறைந்த உரம் விற்பனையில் அதிகளவு லஞ்சம் கைமாறியுள்ளது.
* நுண் உரம், ஜிங் சல்பேட் மற்றும் தானிய விதைகள் மானியத்தில் வழங்கும் திட்டத்திலும் கடந்த 2016-2021 வரை முறைகேடு நடந்துள்ளது.

Tags : AIADMK , 1000 crore corruption in the agriculture sector by producing fake documents in the AIADMK regime: n 3 Ex-ministers, officials involved
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...