சென்னை: 3-வது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருவதற்கு முதலமைச்சரின் நடவடிக்கையே காரணம்; இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. கொரோனா தடுப்பூசி முழுமையாக போடப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு மாறும்.தடுப்பூசி போடுவதை தமிழ்நாடு அரசு மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளது.தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு இருந்தால் நாளொன்றுக்கு 7 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இயலும். 3 வது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என கூறினார்.
தமிழ்நாடு நிதிநிலை நிர்வாகத்தின் பொறுப்புடமை சட்ட முன்வடிவை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிமுகப்படுத்தினார். இதைத்தொடர்ந்து, சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து திமுக எம்எல்ஏ உதயசூரியன் பேசினார். கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள் குறித்தும், தற்போது வேளாண்மைக்கு தனிநிதிநிலை அறிக்கை ஆகியவை குறித்தும் அவர் பேசினார். முந்தைய ஆட்சிக்காலத்தில் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல், ஊரடங்கை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை எனக்கூறிய அவர், இந்த ஆட்சியில் சொன்னபடியே ரூ.4,000 நிவாரணம் வழங்கி ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.