×

வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது 8 அடி உயர பெருமாள் சிலை கண்டெடுப்பு

அரியலூர் : அரியலூர் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது 8 அடி உயரமுள்ள பெருமாள் சிலை நேற்று கண்டெடுக்கப்பட்டது.அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கரையான்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். வாட்டர் சர்வீஸ் கடை வைத்துள்ளார். இவருக்கு சொந்தமான 3 சென்ட் இடத்தில் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணி கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று 4அடி தோண்டி கொண்டிருந்தபோது கற்சிலை போன்று தென்பட்டது.

இதனையடுத்து அந்த கற்சிலையை மேலே எடுக்கும் முயற்சியில் அப்பகுதி மக்கள் முயன்றனர். அந்த கற்சிலை 8 அடி நீளத்தில் இருந்ததால் பொதுமக்களால் மேலே எடுக்க முடியவில்லை. இது குறித்து அரியலூர் ஆர்டிஓ ஏழுமலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த சிலை மேலே கொண்டு வரும்போது பெருமாள் சிலை என தெரிய வந்தது. அப்போது அந்த பகுதியில் கூடியிருந்த பொதுமக்கள் கோவிந்தா கோவிந்தா என கூறி வழிபட்டனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் சிலையை சுத்தம் செய்து பாலாபிஷேகம் செய்து மாலையிட்டு தீபாராதனை காட்டினார்.

இந்த சிலை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் ஆர்டிஓ ஏழுமலையிடம் பெருமாள் சிலை ஒப்படைக்கப்பட்டது. இந்த சிலை திருச்சியிலுள்ள அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட உள்ளதாகவும், தொல்பொருள் ஆராய்ச்சி துறையினரின் ஆராய்ச்சிக்கு பின்னரே கண்டெடுக்கப்பட்ட சிலை எந்த காலத்தை சேர்ந்தது என்பது குறித்து தெரியவரும் எனக்கூறப்படுகிறது.

Tags : Peru , Ariyalur,foundation to build a house,Perumal Statue,8 Feet
× RELATED ஐ.டி., ஈ.டி ரெய்டு நடத்தி, மிரட்டி...