×

கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை கூடலூர் அதிமுக பிரமுகர் வீட்டில் 176 மதுபாட்டில்கள் பறிமுதல்

கூடலூர் : கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வந்த அதிமுக பிரமுகர் வீட்டில் இருந்து 176 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இரண்டாவது மைல் பகுதியில் ஒருவரது வீட்டில் கர்நாடக மாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கூடலூர் இன்ஸ்பெக்டர் அருளுக்கு  ரகசிய தகவல் கிடைத்தது.

 இதையடுத்து இன்ஸ்பெக்டர் உத்தரவின் பேரில் எஸ்ஐ வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் சம்பவ பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் வசிக்கும் விமல்நாதன் என்பவரது வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். விமலநாதன் நீலகிரி மாவட்ட அதிமுக இளைஞரணி துணைச் செயலாளராக உள்ளார்.

அவரது வீட்டில் இருந்த மதுபாட்டில்கள், அவரது தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை என 176 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் வருவதை அறிந்து விமலநாதன் தப்பினார். அவரது சகோதரர் புஷ்ப அருண் (34) மற்றும் பிரபாகரன்  (36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான இருவரையும் கூடலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய விமலநாதனை தேடி வருகின்றனர்.

Tags : Karnataka ,Kudalur Exp , Cuddalore,Karnataka, Liquor Bottle,AIADMK
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!