சிவகாசி: சாத்தூர் அருகே வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் தாய், மகன் உட்பட 4 பேர் உடல் கருகி பலியாகினர். பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாயின. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை தாலுகா தாயில்பட்டியைச் சேந்தவர் பிரபாகரன் (32). இவரது தம்பி சூர்யா (30). இருவரும் வீட்டில், தடை செய்யப்பட்ட கெமிக்கல் பொருளான, குளோரேட் மூலப்பொருளைப் பயன்படுத்தி பட்டாசு தயாரித்து வந்துள்ளனர். அங்கு, இதே பகுதியைச் சேர்ந்த காளிராஜ் மனைவி கற்பகவள்ளி (35) நேற்று காலை வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். திடீரென உராய்வு ஏற்பட்டு பலத்த சத்தத்துடன் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் கற்பகவள்ளி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பாகங்கள் 500 மீட்டர் தூரம் வரை தூக்கி வீசப்பட்டு மின்கம்பம், மரக்கிளைகளில் தனித்தனியாக தொங்கியது. அருகே வசித்த செல்வமணி (30), அவரது மகன் ரொகோபியா சல்மான் (5) ஆகியோரும் உடல் கருகி உயிரிழந்தனர். வெடி விபத்தால் ஏற்பட்ட அதிர்வில் அருகேயிருந்த மூன்று வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. மேலும் பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்தன. அத்துடன் எதிர்வீட்டில் வசித்து வந்த சோலையம்மாள் (65) என்ற மூதாட்டியின் கால்கள் துண்டானது. பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சூர்யா படுகாயமடைந்தார்.
இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சூர்யா உயிரிழந்தார்.இந்த விபத்தில் அருகில் உள்ள வீடுகளில் வசித்த 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து பிரபாகரன் மற்றும் உறவினர் அப்பலோ ஆகியோரை கைது செய்தனர்.