×

சென்னையில் உள்ள சட்டவிரோத கட்டிடங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன?....அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னையில் சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு கூடுதல் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை மாநகராட்சி 5வது மண்டலத்தில் உள்ள 5,574 சட்டவிரோத கட்டுமானங்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த வக்கீல் ருக்மாங்கதன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ராயபுரம் மண்டலத்தை போல பிற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீது  நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தியதுடன், 5வது மண்டலத்தில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 6 மாதம் அவகாசம் வழங்கி இருந்தனர்.

 இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 6 வார கால அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் விரிவான ஆய்வு தேவைப்படும். கொரோனா பரவல் காரணமாக அதற்கு அவகாசம் தேவைப்படும். எனவே. அரசுக்கு 9 வார அவகாசம் வழங்கப்படுகிறது.  விதிமீறல் கட்டுமான விவகாரத்தில், அரசு அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளது. இதை அரசு தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி விசாரணையை தள்ளிவைத்தனர்.



Tags : Chennai ,Icourt , Illegal Buildings, Government Report, iCourt
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு