பூந்தமல்லி: ராமாபுரம் வள்ளுவர் சாலையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளது. இங்கு, வங்கி மேனேஜர் முரளிபாபு 2 தினங்களுக்கு முன்பு சென்று கணக்கை சரிபார்த்தார். அப்போது, டெபாசிட் மெஷினில் இருந்து ₹1.50 லட்சம் மாயமாகி இருந்தது தெரிந்தது. உடனே, அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் கடந்த 17ம் தேதி மாலை ஏடிஎம் மையத்திற்கு வந்த 2 மர்ம நபர்களில் ஒருவன் ஹெல்மெட் அணிந்திருந்தான். அவர்கள் இருவரும் சேர்ந்து ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ₹10 ஆயிரம் வீதம் 15 முறை மொத்தம் ₹1.50 லட்சத்தை டெபாசிட் செய்யும் மெஷினில் இருந்து எடுத்து சென்றது பதிவாகி இருந்தது. தொடர்ந்து ஆய்வு செய்ததில் நூதனமான முறையில் மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.
பணம் செலுத்தும் மெஷினில் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் போடும் போது அதன் ஷட்டர் மூடாதபடி 20 நொடிகள் வரை கையில் பிடித்துக் கொண்டால் அந்த பணம் உள்ளே சென்றது போல காட்டும். இதை பயன்படுத்தி பணத்தை நூதன முறையில் திருடியதும் தெரியவந்தது. இதேபோல், விருகம்பாக்கம், வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட ஏடிஎம் மையங்களில் அதே ஆசாமிகள் பல லட்சம் ரூபாயை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.