×

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற பொன்மொழிக்கு ஏற்ப திமுக அரசு செயல்பட்டு வருகிறது : ஆளுநர் புரோஹித் பாராட்டு!!

சென்னை : கொரோனா பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் 16வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு, கூடும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இதுவாகும். வணக்கம் எனவும் தமிழ் இனிமையான மொழி எனவும் கூறி உரையை தொடங்கினார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அவர் உரை நிகழ்த்தியது பின்வருமாறு..

*எளிமையான வாழ்க்கையை வாழுங்கள் இது ஊழலை அகற்றிவிடும் இது எனது செய்தி.

*தமக்கு வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என பாரபட்சமின்றி மக்கள் அனைவருக்குமான அரசாக இந்த அரசு செயல்படும். சமூக நீதி, சமுத்துவத்தை அடித்தளமாகக் கொண்ட அரசாக இந்த அரசு செயல்படும்.

*மாநில சுயாட்சி இலக்கை எட்ட தமிழக அரசு உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு பரிசீலித்து நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.தமிழை இந்திய அலுவல் மொழியாக ஆக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாடுபடும்.

*கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எனது பாராட்டுக்கள். தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் கொரோனா தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை.

*மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மீதான புகாரை விசாரிக்கும் லோக் ஆயுக்தாவுக்கு உரிய அதிகாரம் வழங்குவோம்.ரூ2.10 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ4,000 வழங்கப்பட்டுள்ளது.கிங் ஆராய்ச்சி வளாகத்தில் ரூ250 கோடியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை.

*ஈழத் தமிழர்களுக்கு இலங்கையில் சம உரிமை கிடைக்க வலியுறுத்துவோம் . ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

*உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் 63,500 மனுக்கள் மீது தீர்வு.கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்.69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்.

*நீட் தேர்வை ரத்து செய்யும் சட்ட முன் வடிவை கொண்டு வந்து ஜனாதிபதி ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

*கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் தோளோடு தோள் நின்று கொரோனாவை எதிர்த்து பணிபுரிகின்றனர். கொரோனா காலத்தில் மக்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கியது தமிழக அரசு. முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.335 கோடி நிதி குவிந்துள்ளது. நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை ஜூலை மாதம் வெளியிடப்படும்.

 *வேளாண்துறைக்கு முக்கியத்துவம் அமைக்கும் வகையில் தனி பட்ஜெட் அமைக்கப்படும். சாகுபடியில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி வேளாண்மையை நவீனமாக முக்கியத்துவம் கொடுக்கப்படும். கலைஞரால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் உழவர் சந்தை அமைக்கப்படும். இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களும் திருத்தங்களையும் மேற்கொள்ள மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.

*ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அண்ணாவின் பொன்மொழிக்கு ஏற்ப திமுக அரசு செயல்பட்டு வருகிறது .எல்லா வளமும் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற இந்த அரசு உறுதியேற்றுள்ளது.

*கச்சத் தீவு மீட்பு, மீனவர் நலனுக்கான ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் மேற்ப்பார்வையில் கிராமப்புற சந்தைகள், வாகனங்களில் காய்கறி விற்பனை செய்தல் விரிவாக்கம் செய்யப்படும்.காவிரி- குண்டாறு உள்ளிட்ட நதிநீர் இணைப்பு திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்துவோம்.மின்வாரிய நெருக்கடி தொடர்பான உரிய ஆய்வு மேற்கொள்ளப்படும்.பெரிய நகரங்களின் புறநகர் பகுதிகளில் துணை நகரங்கள் உருவாக்கப்படும்

*சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு தமிழக அரசு உயர் முன்னுரிமை அளிக்கும்.சாதிமதப் பிரச்சனை இல்லாத அமைதியான இணக்கமான சூழல் மாநில வளர்ச்சிக்கு இன்றியமையாதது.விடுபட்ட 9 மாவட்டங்களில் கொரோனா குறைந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.

*எங்கும் எப்போதும் அரசு சேவைகளை மக்கள் இணைய வழியில் உடனுக்குடன் பெற வழிவகை செய்யப்படும்.

*சிங்கார சென்னை -2 திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க அரசு உறுதியாக உள்ளது.மதுரையில் ரூ70 கோடியில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும்.

*மதுரவாயல் சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் விரிவுபடுத்த நடவடிக்கை  எடுக்கப்படும்.

*தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும். புதிய ரேசன் அட்டை விண்ணப்பித்தால் 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். 3 விவசாய சட்டங்களை ரத்து செய்ய சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

*மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்திட அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்.

*பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை வகுக்க நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் குழு அமைக்கப்படும்.

*சென்னை-கன்னியாகுமரி தொழில் பெருவழியில் புதிய தொழில் நிறுவனங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.அரசு பணியில் ஆதி திராவிடர் பழங்குடியினருக்கான காலியிடங்கள் சிறப்பு நியமனம் மூலம் நிரப்பப்படும்.தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடப்பாண்டு பெரிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும். கொரோனா மூன்றாம் அலையை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்



Tags : DMK government ,God ,Governor Purohit , சட்டப்பேரவை
× RELATED எதற்காக இறைத்தூதர்கள்?