×

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று முதல் பஸ்கள் ஓடும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1. மெட்ரோ ரயில் இயக்கவும் அனுமதி
2. ஆட்டோ, டாக்ஸி இ-பதிவில்லாமல் செல்லலாம்
3. கடைகள் திறந்திருக்கும் நேரம் அதிகரிப்பு
4. அரசு அலுவலகங்கள் முழுமையாக இயங்கும்

சென்னை: தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா தாக்கத்தின் அடிப்படையில் மாவட்டங்களை 3 வகையாக பிரித்து புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ளேயும், வெளியேயும் 50 சதவீத பயணிகளுடன் பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  மேலும் முதல் வகையில் 11 மாவட்டங்களும், 2ம் வகையில் 23 மாவட்டங்களும் உள்ளது. இங்கு பஸ்கள் இயங்காது. பத்திரப்பதிவு அலுவலகம் உள்பட அரசு அலுவலகங்கள் 100 சதவீதம் பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   தமிழக அரசின் தீவிர நடவடிக்கைகள் மூலம் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது.

50 ஆயிரத்தை தாண்டும் என்று கணிக்கப்பட்ட கொரோனா பரவல் விகிதம் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் தற்போது 8 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. கொரோனா பரவல் குறைவதன் எதிரொலியாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், மக்களின் வாழ்வாதாரம் கருதி புதிய தளர்வுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து வருகிறார். அந்தவகையில், கடந்த 7ம் தேதி முதல் ஊரடங்கில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தொற்று சதவீதம் குறைவு காரணமாக 27 மாவட்டங்களில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது.  இந்தநிலையில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் புதிய தளர்வுகளை வழங்குவது குறித்து நேற்று முன்தினம் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்து சேவைக்கு அனுமதி வழங்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்தது. இதேபோல், ஏற்கனவே உள்ள நேரக்கட்டுப்பாடுகளையும் தளர்த்த ஆலோசனை வழங்கியது. அந்தவகையில், தமிழகத்தில் வரும் 28ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், மாவட்டங்களை 3 வகைகளாக பிரித்து புதிய தளர்வுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:  கொரோனா பரவலைத் தடுப்பதற்காக, இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு 30.6.2021 வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு, அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில், கொரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், இந்த ஊரடங்கு வரும்  21.6.2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில்,  19.6.2021 அன்று மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த  ஊரடங்கை 28.6.2021 காலை 6 மணி வரை, நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன். மேலும் மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று   பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்கள் வகைப் படுத்தப்பட்டுள்ளன.

* வகை 1 - (11 மாவட்டங்கள்) கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை.
* வகை 2 - (23 மாவட்டங்கள்) அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர்.
* வகை 3 -  (4 மாவட்டங்கள்) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு. மேற்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களுள், வகை 1-ல் உள்ள 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும். மேலும், வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி,* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 முதல் மாலை 7 மணி வரை செயல்படும்.
* காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி.
* உணவகங்கள் மற்றும் அடுமணைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதிக்கப்படும். அதுபோல மின்வணிக சேவை நிறுவனங்களும் செயல்படலாம்.
* இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகள் 9 மணி வரை செயல்படும்.
* அத்தியாவசியத் துறைகள் 100 சதவீதமும்; இதர அரசு அலுவலகங்கள், 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும்.
* சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்கும்.
* தனியார் நிறுவனங்கள், 33 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.
* ஏற்றுமதி தொடர்புடைய நிறுவனங்கள் செயல்படலாம்.
* இதர தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதி: l மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள், வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள்
* ஹார்டுவேர் கடைகள்.
காலை 9 முதல் மாலை 5 மணிவரை: வாகனங்களின் உதிரிபாகடைகள், வாகன ஷோரூம்கள், கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்,  காலணிகள் கடைகள், * கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், மிக்சி, கிரைண்டர்,  தொலைக்காட்சி  வீட்டு உபயோக பழுது நீக்கும் கடைகள்,  மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை
* அனைத்து வகையான கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும்.
* காலை 6 மணி முதல் மாலை  மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், அனுமதி வழங்கப்படுகிறது.
* திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.
* வீட்டு வசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்படலாம்.
மேலும், வகை 3-ல் உள்ள  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
அதன்படி, தனியாக செயல்படுகின்ற அனைத்து கடைகள், நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம்.
* மின்விநியோக உணவு டெலிவரி, உணவகங்கள் மற்றும் பேக்கரி இரவு 9 மணி வரை அனுமதிக்கப்படும்.
* குழந்தைகள், சிறார்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், பெண்கள், விதவைகள் ஆகியோருக்கான இல்லங்கள் மற்றும் இவை தொடர்புடைய போக்குவரத்து இ-பதிவில்லாமல் அனுமதிக்கப்படும்.
* சிறார்களுக்கான கண்காணிப்பு / பராமரிப்பு, சீர்திருத்த இல்லங்களில் பணிபுரிவோர் இ-பதிவில்லாமல் அனுமதிக்கப்படுவர்.
* அனைத்து வகையான கட்டுமானப் பணிகளுக்கும் அனுமதி.
* அனைத்து அரசு அலுவலகங்கள், 100% பணியாளர்களுடன் செயல்படும்.
* சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்கும்.
* அனைத்து தனியார் நிறுவனங்கள், 50 சதவீத பணியாளர்களுடன்  இயங்கலாம்.
* ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து செயல்படலாம்.
* இதர தொழிற்சாலைகளும் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும்.
* மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இ-பதிவுடன் அனுமதி.
* மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி.
* ஹார்டுவேர் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும்.
* கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும்.
* வாகன விநியோகஸ்தர்களது வாகன பழுதுபார்க்கும் மையங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம்.
* வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களது கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி.
* கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும்.
* பாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ/ வீடியோ கடைகள், சலவைக் கடைகள், தையல் கடைகள், அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள்  காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி.
* மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 9 மணி முதல் மாலை 7  மணி வரை செயல்படும்.
* கணினி வன்பொருட்கள், மென்பொருட்கள், மின்னனு சாதனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள்  காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம்.
* கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும்.
* அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட வேண்டும்.
* காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், அனுமதிக்கப்படுகிறது.
* திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 நபர்கள் மட்டும் பணிபுரியும் வகையில் நடத்த வேண்டும். படப்பிடிப்பில் பங்கேற்றும் பணியாளர்கள் / கலைஞர்கள் அவசியம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு படப்பிடில் கலந்து கொள்ள வேண்டும்.
* படப்பிடிப்புகளுக்கு பிந்தைய தயாரிப்பு பணிகள் அனுமதிக்கப்படும்.
* திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.
* மாவட்டத்திற்குள் பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.
* மெட்ரோ ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்படும்.
* சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கிடையே பொது பேருந்து போக்குவரத்து குளிர் சாதன வசதி இல்லாமல், 50 சதவீத  இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி.
* வாடகை வாகனங்கள், டாக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவில்லாமல் செல்ல அனுமதிக்கப்படுகிறது.  மேலும், வாடகை டாக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.  
* வீட்டு வசதி நிறுவனம் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெற வேண்டும். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு இ-பாஸ்
திருமண நிகழ்வுகளுக்கு, வகை 2 மற்றும் 3ல் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களுக்கிடையே இ-பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதிக்கப்படும். இதற்கான இ-பாஸ் திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடமிருந்து இணையவழியாக (https://eregister.tnega.org) விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.  மேலும், திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.



Tags : Chennai ,Chengalpattu ,Kanchipuram ,Tiruvallur ,Chief Minister ,MK Stalin , Chennai, Chengalpattu, Kanchipuram and Tiruvallur districts will have their first buses from today: Chief Minister MK Stalin's announcement
× RELATED மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதியதில் ஒருவர் பலி