ஜெனிவா: புதிய தகவல் மற்றும் தொழில்நுட்ப விதிகள் குறித்து விமர்சித்த ஐநா குழு அறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐநா மனித உரிமையை சேந்த மூவர் குழுவினர் அண்மையில் வெளியிட்ட செய்தியில் இந்தியாவின் புதிய தகவல் தொழிநுட்ப விதிகள் சர்வதேச விதிகளுக்கு முரணாக இருப்பதாக குறிப்பிட்டனர். இதற்கு ஜெனிவாவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஜனநாயகம் சரவதேச அங்கீகாரம் பெற்றது என்றும் கருத்துரிமை மற்றும் பேச்சுரிமை இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் உறுதியளித்த ஒன்று என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை தயாரிக்கும் முன்பு 2018-ம் ஆண்டில் நீண்ட ஆலோசனை நடத்தி முடிவு செய்ததாகவும், இந்திய தூதரகம் கூறியுள்ளது. சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு அதிகாரம் கொடுக்கும் விதிகளும் சமூக வலைதளத்தால் பாதிக்கப்படும் நபர்களுக்கு தீர்வு கிடைக்கவும் வழிமுறைகள் வகுக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது. தொழிநுட்ப கண்டுபிடிப்பில் சர்வதேச அளவில் இந்தியா முன்னணியில் உள்ள நாடு என்பதால் அதன் டிஜிட்டல் உரிமைகளை காக்க உரிமை உள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் பயனாளர்களின் புகார்களுக்கு தீர்வு, பயனாளர்களின் பாதுகாப்பு சமூக வலைதளத்தில் பெண்களுக்கு கலங்கம் ஏற்படுவதை தடுப்பது, சட்டவிரோத தகவல்களை நீக்க போன்ற அம்சங்கள் புதிய தொழிநுட்ப விதிகளில் இருப்பதாக இந்தியா கூறியுள்ளது.
பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஓடிடி தளங்களை தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் வகையில் பிப்ரவரி மாதம் புதிய விதிகளை மத்திய அரசு அமல்படுத்தியது. இதனை கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் டிவிட்டர் நிறுவனம் மட்டும் ஏற்க மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.