புதுடெல்லி: இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலதிபர்கள், நிறுவனங்கள் சொந்த நாட்டில் வருமான வரி செலுத்துவதில் இருந்து தப்பிப்பதற்காக சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கியில் கணக்கு வைத்து பணத்தை பதுக்குகின்றனர். கடந்த 2020ம் நிதியாண்டில் மட்டும், சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் செய்த தொகை அதிகளவில் உயர்ந்துள்ளது. சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் வைப்புத் தொகையானது ரூ.20,700 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ரூ.6,625 கோடியாக இருந்த இந்தியர்களின் வைப்புத்தொகையானது 2020ம் ஆண்டில் ரூ.20,700 கோடியாக உயர்ந்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. இது கடந்த 13 ஆண்டுகளில் மிக அதிகம். இதனை மறுத்துள்ள மத்திய நிதியமைச்சகம், ‘இந்த பணம் இந்தியர்களுடையதா, அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்களுடையதா அல்லது மூன்றாம் நாடுகளில் உள்ள இந்திய நிறுவனங்களின் பணமா என்பது குறிப்பிடப்படவில்லை. இது தொடர்பாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது,’ என கூறி உள்ளது.