×

தொகுதி மேம்பாட்டு நிதியில் முறைகேடு!: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யாவுக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு..!!

சென்னை: தொகுதி மேம்பாட்டு நிதியில் முறைகேடு செய்ததாக தியாகராயர் நகர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் தியாகராயர் நகர் சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் மேற்குமாம்பலம் பகுதியில் அம்மா உள்விளையாட்டு அரங்கம் கட்ட 2016 - 17ம் ஆண்டில் 5 கட்டங்களாக நிதி ஒதுக்கி 1 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. 


இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. குறிப்பாக 2018 - 19ம் நிதியாண்டில் மேற்குமாம்பலம் காசிக்குளம் பகுதியில் கட்டிடமே கட்டாமல் ரூ.30 லட்சம் செலவு செய்ததாகவும் கணக்கு காட்டப்பட்டது. அதேபோல் 2017 - 18ம் ஆண்டில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் சட்டத்துக்கு புறம்பாக ரூ.2 கோடி நிதியை வெறும் சாலை அமைக்கும் பணிக்கு மட்டும் பயன்படுத்தியதாகவும் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ராயபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்ததாசன் என்பவர் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். 


மனுவில், தியாகராயர் நகர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யநாராயணன் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் எனவே இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி வரும் 27ம் தேதி வழக்கு குறித்தும், லஞ்ச ஒழிப்புத்துறை உரிய பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அன்றைக்கு ஒத்திவைத்திருக்கிறார். 



Tags : AIADMK MLA ,Satya ,iCourt , Block Development Fund, AIADMK Former MLA Satya, iCourt
× RELATED தேசிய சராசரியைவிட தமிழகத்தில்...