×

திருடனிடம் திருடிய போலீஸ்: டெபிட் கார்டு மூலம் ரூ.4 லட்சம் திருடிய காவலர் ரஞ்சித் சஸ்பெண்ட்

அவிநாசி: அவிநாசியில் பழைய இரும்பு திருடுகிறவர்களிடமே போலீஸ்காரர் ஒருவர் 4 லட்சம் ரூபாய் திருடி சஸ்பெண்ட் ஆகி இருக்கிறார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் ரஞ்சித் என்பவர் கடந்த சில மாதங்கள் முன்பு இரும்பு மற்றும் செம்பு தகடு திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற கைதியிடம் இருந்து மிரட்டி வாங்கிய ஏடிஎம் கார்டில் இருந்து சுமார் 4 லட்சம் ரூபாய் பணத்தை திருடியதாக ஜாமீனில் வெளியான அந்த கைதியான ஆனந்தன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவலர் ரஞ்சித்தை சஸ்பெண்ட் செய்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து கின்னாகானூர் பகுதியில் இருவேறு உருக்கு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த இரும்பு உருக்காலைகள் கடந்த சில மாதங்கள் முன்பு காவலரை தாக்கிவிட்டு இரும்பு மற்றும் செம்பு தகடு திருடியதாக புகார் வந்தது. இதனையடுத்து சேவூர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் தேதி அன்னூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் உட்பட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆனந்தன் என்பவர் சிறை செல்லும் முன்பு சேவூர் காவல் நிலையத்தில் அப்போது காவலராக பணியாற்றி வந்த ரஞ்சித் என்பவர் ஆனந்தனிடம் ஏடிஎம் கார்டு மற்றும் பின் நம்பர்களை மிரட்டி வாங்கியுள்ளார். தற்போது சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த ஆனந்தன் என்பவர் தனது வங்கி கணக்கை சரிபார்த்த போது சுமார் 4 லட்சத்திற்கும் மேலான பணம் திருடப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் மனித உரிமை ஆணையம் மற்றும் காவல் உயர் அதிகாரிகளிடம் அவர் புகாரளித்தார். புகாரை அடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் காவலர் ரஞ்சித் என்பவர் 4 லட்சம் ரூபாய் பணத்தை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து காவலரை சஸ்பெண்ட் செய்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.



Tags : Ranjith , police, suspend
× RELATED திண்டிவனத்தில் போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது!!