×

கேளம்பாக்கம் சுஷீல்ஹரி பள்ளி ஆசிரியை தீபா முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்..!!

சென்னை: கேளம்பாக்கம் சுஷீல்ஹரி பள்ளி ஆசிரியை தீபா முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். சுஷீல்ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை அளித்ததாக மாணவிகள் குற்றம்சாட்டி புகார் அளித்திருந்தார்கள். அதன் பேரில் விசாரணை நடத்தப்பட்டு சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார். 


இதையடுத்து திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே பள்ளி மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக  சுஷீல்ஹரி பள்ளி ஆங்கில ஆசிரியை தீபா வெங்கட்ராமன் என்பவர் மீது போக்சோ சட்டத்தில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


இந்நிலையில் சுஷீல்ஹரி பள்ளி ஆசிரியை தீபா முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார். அதில் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் சுஷீல்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியில் சேர்ந்து தற்போது வரை பணியாற்றி வருகிறேன். பாலியல் குற்றச்சாட்டு புகாரில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார். 


இந்த நிலையில் தனக்கு எதிராக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தனக்கு எதிரான குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. 


எனவே இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் இதற்காக நீதிமன்றங்கள் விதிக்கும் நிபந்தனைகளை தான் ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். வழக்கில் கைதாகாமல் இருக்க தீபா தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது. 



Tags : Sushilhari School ,High Court of Chennai ,Deepa , Sushilhari school teacher Deepa, pre-bail, iCourt, petition
× RELATED விழிப்புணர்வு பேரணி