கொச்சி: கேரளாவில் உள்ள கொச்சியில் இருந்து 7 கி.மீ தொலைவில் அரபிக் கடலில், அவரை விதை வடிவத்தில் தீவு போன்ற அமைப்பு இருப்பது போல் கூகுள் மேப்பில் பதிவாகி உள்ளது. இந்த புகைப்படத்தை ஒருவர் பேஸ்புக்கில் பதிவிட அது தற்போது வைரலாகி உள்ளது. கடலுக்கடியில் இருக்கும் அந்த ரகசிய தீவு 8 கி.மீ. நீளமும், 3.5 கி.மீ. அகலமும் உடையதாக உள்ளது. இந்த திடீர் தீவு ஆராய்ச்சியாளர்கள் இடையே ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலுக்கடியில், இயற்கையாக புதிய தீவு உருவாகி வருகிறதா என்பது குறித்து ஆய்வுகள் தொடங்கி உள்ளன. கொச்சி துறைமுகம் பகுதியில் ஆழப்படுத்தும் பணி நடந்ததால், கடலுக்கடியில் மணல் குவிந்து, இதுபோன்ற அமைப்பு உருவாகி இருக்கலாம் என்று கேரள மீன் மற்றும் கடல் வள பல்கலைக் கழக்கத்தின் துணை வேந்தர் ஜான் கூறியுள்ளார். இந்த பகுதியில் இதற்கு முன் இப்படிப்பட்ட இடம் இருந்தது கிடையாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.