அகமதாபாத்: குஜராத் தொழில்நுட்ப பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட 146 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, குஜராத் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (ஜிடியு) சார்பில் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கின. குறிப்பாக, இளங்கலை, டிப்ளமோ, இன்ஜினியரிங், பார்மசி, எம்பிஏ உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான தேர்வு நடைபெற்றது. அதில், தேர்வு எழுதும்போது பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கிய 160 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களிடம் நேரடி விசாரணை நடத்தப்பட்டதில், 146 மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டது.
மீதமுள்ள 14 பேர் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களில் விதவிதமான தண்டனைகள் வழங்கப்பட்டன. அதன்படி, 26 மாணவர்கள் இந்தாண்டு தேர்வு எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அனைத்து பாடங்களுக்கும் இந்த செமஸ்டரில் தேர்வெழுத 46 மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஒரு மாணவருக்கு தற்போதைய செமஸ்டர் மற்றும் அடுத்த இரண்டு செமஸ்டர்களுக்கான தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாணவர்கள் இரண்டு வருடங்களுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டது.