சென்னை: பப்ஜி மதனின் 2 சொகுசு கார்கள், 3 கையடக்க கணினி, ஒரு டிரோனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி வீடியோவாக பதிவிட்ட யூ-டியூபர் பப்ஜி மதன் கைதானார். தருமபுரியில் பதுங்கியிருந்த பப்ஜி மதனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மதன் கைது செய்யப்பட்டதால் முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை மத்திய குற்றப்பிரிவில் அவர் மீது 160க்கும் மேற்பட்ட புகார்கள் அவர் மீது தமிழ்நாடு முழுவதும் வந்ததை அடுத்து அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக அவரது யு-டியூப் சேனலில் தடை செய்யப்பட்ட பப்ஜி போன்ற செயலியை விளையாடி அதில் பெண்களை ஆபாசமாக பேசுவதும், சிறுவர்களை பாதிக்கும் வகையில் பல்வேறு விதமாக பேசுவதுடன் கூடிய வீடியோ பதிவிட்டதும் வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போது சேலத்தில் இருக்கும் அவரது மனைவி கிருத்திகாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் தான் இந்த யு-டியூப் சேனல்களுக்கு நிர்வாகி என்ற அடிப்படையில் அவர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையிலும் அவருக்கு எங்கெங்கு நண்பர்கள் இருக்கிறார்கள், என்பதை பெற்று அதன் அடிப்படையில் மதனை தேடி வந்தனர். இதனிடையே உயர்நீதிமன்றத்தில் மதனின் முன்ஜாமீன் மனுவும் நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் தான் தருமபுரியில் அவர் பதுங்கி இருப்பதை அறிந்து தனிப்படை போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
குறிப்பாக மதன் இந்த யு-டியூப் சேனலை பயன்படுத்தி கோடி கணக்கான ரூபாய் பணத்தை சம்மதித்தது மதனின் மனைவியிடம் விசாரணை நடத்திய போது அம்பலமானது. குறிப்பாக சேலம், சென்னையை பொறுத்தவரை பெருங்களத்தூரில் சொகுசு வீடுகளும், 2 BMW, 1 ஆடி கார் உட்பட 3 சொகுசு கார்கள் சம்பாதித்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
தான் சம்பாதித்த பணத்தை வைத்து வெளிநாடுகளில் முதலீடுகளாகவும், குறிப்பாக பிட்-காயின்களில் முதலீடுகளாகவும் செய்துள்ளார். இதன் அடிப்படையில் கார்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவருடைய லேப்டாப், டிரோன்களை பயன்படுத்தி இவர் வீடியோ பதிவிட்டுள்ளதால் அந்த டிரோன் கேமரா உள்ளிட்டவைகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதெல்லாம் குற்றங்களுக்கு எதிராக திரட்டப்படும் முக்கிய ஆதாரங்களாக பார்க்கப்படுகிறது. இவரை தலைமறைவாக இருக்கும் போது ஒரு சொகுசு காரை எடுத்து கொண்டு தான் தலைமறைவாகி இருக்கிறார். மதனின் நண்பர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.